கோல்கட்டா: ''கொரோனா அச்சுறுத்தலுக்கு பின், 'பி.எம்., கேர்ஸ்' என்ற பெயரில் திரட்டப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்துக்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சீராகவே உள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து, எங்களை மிரட்டும் வேலையை, மத்திய அரசு செய்து வருகிறது; அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்.
புதிய வேளாண் சட்ட விவகாரத்தில், பா.ஜ.,வை எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை. ஆனாலும், சட்டத்தை திரும்ப பெறாமல் அடம் பிடிக்கின்றனர்.
பா.ஜ., அரசியல் கட்சி அல்ல. அவர்கள், பொய்யின் மொத்த கூடாரம். பி.எம்., கேர்ஸ் என்ற பெயரில் திரட்டப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது?
![]()
|
அந்த நிதியின் எதிர்காலம் குறித்து யாருக்கும் தெரியாது. அதன் மீது தணிக்கை நடத்தப்படவில்லை.கொரோனாவை எதிர்த்து போராட மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்காமல், வெறும் அறிவுரைகளை மட்டுமே, பா.ஜ., அரசு வழங்கி வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE