புதுச்சேரி : மனைவியிடம் தகராறு செய்து ஸ்கூட்டரை சேதப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், ராயநல்லுார், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன்,38; இவரது மனைவி ஜெயலட்சுமி,34; புதுச்சேரி, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சத்யநாராயணன், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்தார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஜெயலட்சுமி சில வாரங்களுக்கு முன் கணவரை பிரிந்து, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, கஸ்துாரிபாய் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 26 ம் தேதி, தட்டாஞ்சாவடி வந்த சத்யநாராயணன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ஜெயலட்சுமியிடம் தகராறு செய்து, வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை அடித்து உடைத்தார். மறுநாள் 27ம் தேதி கதிர்காமம் மருத்துவமனைக்கு சென்று, அசிங்கமாக திட்டி மிரட்டல் விடுத்தார்.இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் சத்யநாராயணன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE