புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாசு விதிகளை மீறி செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது என தெரிவித்தது.

தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பராமரிப்பு பணிகளுக்காக இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரித்ததுடன், ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE