பொள்ளாச்சி : ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுகளுக்கு மட்டும் கொண்டைக்கடலை வினியோகிக்கும் நிலையில், மற்றவர்களுக்கு சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்கலாம், என, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு, கடந்த ஜூலை முதல் நவம்பர் வரையிலான, ஐந்து மாதங்களுக்கு தலா ஒரு கிலோ வீதம், மத்திய தொகுப்பில் இருந்து, 'கோவிட் 19' நிவாரணமாக கொண்டைக்கடலை வழங்க ஒதுக்கீடு செய்தது. முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மட்டும், இம்மாத இறுதிக்குள் கொண்டைக்கடலை வினியோகிக்க வேண்டும் என, நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். தற்போது, கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலை வழங்க, 'டோக்கன்' வழங்குவது துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:முன்னுரிமை பெற்ற கார்டுகளுக்கு கொண்டைக்கடலை வினியோகிக்க உத்தரவிட்டிருப்பதால், மற்றவர்கள் மனம் பாதிக்கிறது.இதை தவிர்க்க, மற்ற கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலைக்கு பதிலாக, சர்க்கரை, கெரசின், பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை எப்போதும் போல இலவசமாக வழங்கலாம். இதனால், அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.தேர்தல் நேரத்தில், கொண்டைக்கடலை தொகுப்பை பிரித்து, அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE