மேட்டுப்பாளையம் : ரயில்வே கேட் திறந்து வைக்கும் நேரம், அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையிலிருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் இரும்பு கேட் அமைக்கப்பட்டுள்ளது. காட்டூர், மணி நகர், மகாதேவபுரம், எஸ்.எம். நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், ரயில்வே கேட் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.இரவு, 7:45 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றவுடன், இரும்பு கேட் பூட்டப்படும். அதன் பின் வரும் வாகனங்கள் அனைத்தும், ஊட்டி சாலை வழியாக சுற்றிக்கொண்டு, பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறது. இதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.
இந்த ரயில்வே கேட்டை இரவு, 9: 00 மணி வரை திறந்து வைக்கும்படி, பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.இந்நிலையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நேரத்தை, 7:45 பதிலாக, இரவு, 9:20 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இரும்பு கேட், 9:30 மண வரை திறந்து வைப்பதால், எவ்வித சிரமமும் இல்லாமல், சென்று வருகின்றனர். இரவு ஒன்றரை மணிநேரம் கூடுதலாக இந்த கேட் திறந்து வைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE