திருவொற்றியூர்; திருவொற்றியூரில், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் மாற்றியால், விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.சென்னை, திருவொற்றியூர் குப்பைமேடு - சத்தியமூர்த்தி நகர் பக்கிங்ஹாம் பாலம் வரையிலான, இணைப்பு சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.மணலி, பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாலப் பணிகள் நடப்பதால், அவ்வழியே போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஓராண்டு காலமாக, இணைப்பு சாலை வழியாகவே, வாகன ஓட்டிகள் மணலி சென்று வருகின்றனர்.ஏற்கனவே, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய சாலையில், அடிக்கடி பழுதாகும் தெரு விளக்குகளை, முறையாக பராமரிக்க வேண்டும் என, அடிக்கடி கோரிக்கைகள் எழுகின்றன.இந்நிலையில், கார்கில் நகர் மதகுகள் அருகே, மின் மாற்றி ஒன்று, சாய்ந்த நிலையில், அபாயகரமாக உள்ளது. புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றி என்றாலும், நீரோட்டம் மிகுந்த பகுதி என்பதால், சாய்ந்து நிற்கும் மின் மாற்றி எப்போது விழும் என்ற அச்சத்துடனே, வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.அடுத்தடுத்து, புயல்கள் தாக்கக் கூடும் என்பதால், மின் வாரிய அதிகாரிகள் சுதாரித்து, மின்மாற்றியின் நிலைமையை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE