தர்மபுரி: குழாய் பழுதால் வீணாகும் குடிநீரை, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தர்மபுரி நகராட்சியில் உள்ள, 33 வார்டு மக்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, முறையாக குடிநீர் வழங்குவதில்லை. இதில், எஸ்.வி.,ரோடு, அன்னசாகரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். காந்தி நகர் பகுதியில், எப்போது குடிநீர் வரும் என்றே தெரியாமல், திடீரென குடிநீர் வரும். இவ்வாறு உள்ள நிலையில், காந்தி நகர் முதல்தெரு அருகே உள்ள, குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு, தண்ணீர் வரும்போது, குடிநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. நகராட்சி பகுதியின் பல்வேறு பகுதிகளில், முறையாக குடிநீரே வராத நிலையில், சிறிதளவு வரும் இந்த தண்ணீரும் வெறியேறி வீணாவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை மக்கள் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வீணாகி வரும் குடிநீரை சேமிக்க, பழுதான அக்குழாயை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE