கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, கொளத்தூரிலிருந்து படவேடு செல்லும் சாலையிலுள்ள நல்ல தண்ணீர் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு, முழுவதும் நிரம்பி உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள ஏரி நிரம்பியதால், குளிக்க தடை விதித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏரி நிரம்பி, உபரி நீர் வழிந்தோடுகிறது. உபரி நீர் வழிந்தோடுவதை, பொதுமக்கள் வேடிக்கை பார்த்தும், குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்கின்றனர். இதையடுத்து, பஞ்., நிர்வாகம், ஏரி பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்துள்ளது. அதில், பொதுமக்கள் ஏரியில் குளிக்கக்கூடாது என்றும், மீறி குளித்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் ஏரி கோடிபோகும் பகுதியில் குளித்தும், மீன்பிடித்தும் வருகின்றனர். மேலும், கொளத்தூரில் இருந்து படவேடு செல்லும் சாலையில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் சமீபத்தில் குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டது. ஏரியில் இருந்து வரும் தண்ணீர் மூலம், தற்போது நல்ல தண்ணீர் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, குளம் நிரம்பியதால், இதை காணவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குளத்தில், 20 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால், பொதுமக்கள் குளத்தில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE