ஓசூர்: சேலம் - பெங்களூரு ரயில் பாதையை கடந்து, 12க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று வனப்பகுதிக்குள் சென்றன. ரயில் மோதி, யானைகள் உயிரிழப்பை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 32க்கும் மேற்பட்ட யானைகள், தனித்தனி குழுக்களாக முகாமிட்டுள்ளன. இவற்றில், 12க்கும் மேற்பட்ட யானைகள், சானமாவு வனப்பகுதி நோக்கி, நேற்று காலை சென்றன. அதை தடுக்கும் வகையில், வனத்துறையினர், பட்டாசு வெடித்து மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர். அப்போது, இருதாளம் அருகே, சேலம் - பெங்களூரு ரயில் பாதையை கடந்து, வனப்பகுதிக்கு யானைகள் சென்றன. கடந்த, 2013ல், 35க்கும் மேற்பட்ட யானைகள், ரயில்பாதையை கடந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், இரு யானைகள் பலியாகின. இதுபோன்ற சம்பவத்தை தடுக்க, வனத்துறை ஊழியர்கள், சுழற்சி முறையில், பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். ரயில் வரும் சமயத்தில், ரயில் பாதையை யானைகள் கடக்க நேர்ந்தால், அவற்றை பட்டாசு வெடித்து விரட்ட, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடேதுர்க்கத்தில், யானைகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை முகாமிட்டிருக்கும் என்பதால், குறிப்பிட்ட பகுதியில் மட்டும், ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க, ரயில்வே நிர்வாகத்துக்கு, வனத்துறையினர் கடிதம் எழுதி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE