நாமக்கல்: 'அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்து வருவதால், தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அவற்றை தடுக்க, அதிக குவாரிகளை திறக்க வேண்டும்' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு, மணல் கிடைப்பதில்லை. 'ஒரு யூனிட் மணல், தங்கத்தின் விலைக்கு இணையாக விற்பனை செய்யப்படுகிறது' என, சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மணல் விலை, மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்றதைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு காரணம், லாரி உரிமையாளர்கள் அல்ல. அரசு தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். உண்மையில், ஒரு யூனிட், 10 ஆயிரத்தில் இருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட அரசு குவாரிகள் செயல்பட்டு வந்தன. தினமும், 60 ஆயிரம் யூனிட் மணல், அரசு குவாரிகள் மூலம், ஒரு யூனிட், 313 ரூபாய்க்கு, லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில், வேலூர் மாவட்டம், வடுகன்தாங்கல், தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆகிய, இரண்டு அரசு மணல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்படுகிறது. அங்கு, தினமும், அதிகபட்சம், 500 யூனிட் மணல், ஒரு யூனிட், 1,995 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதிலும், அரசு ஒப்பந்த பணிக்கு என, 100 முதல், 150 யூனிட் மணல் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்கின்றனர். அதனால், மணல் விலை உயர்ந்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் குவாரிகள் செயல்பட்டதால், தினமும் லோடு எடுத்து வந்த நிலையில், தற்போது, ஆன்லைனில் பதிவு செய்து, இரண்டு மாதம் காத்திருந்து, மணல் லோடு ஏற்றுவதும், குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதும் விலை உயர்வுக்கு காரணமாகிறது. எனவே, உடனடியாக தமிழகம் முழுவதும், அதிக எண்ணிக்கையில் குவாரிகளை திறக்க வேண்டும். ஒரே இணையதளம் மூலம், அனைத்து லாரிகளுக்கும். பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE