புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்து, யோசனை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல், உயிரிழந்தோரின் உடல்களை முறையாக கையாளாமல் உள்ள மருத்துவமனைகள் குறித்து, உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிறப்பித்த உத்தரவு:கொரானா பரவல் தடுப்பு விதிமுறை களை, மக்கள் மதிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், கட்டாயம் ஆக்க வேண்டும். அதற்கான யோசனையை, மத்திய அரசும், மற்றவர்களும் தெரிவிக்கலாம்.
ஹிமாச்சல பிரதேச அரசு, மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE