புதுடில்லி:கிழக்கு லடாக்கில், இந்தியப் படைகள் மீது, சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா கூறியுள்ளது. 'இரு தரப்பு ஒப்பந்தங்களை மதித்து சீனா நடப்பதே, பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டு படைகள், ஆறு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டு உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கில், இரு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இந்நிலையில், இந்த தாக்குதலை திட்டமிட்டே சீனா நடத்தியதாக, அமெரிக்க பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறியுள்ள தாவது: எல்லையில் இரு நாட்டு படைகள் இருக்கும்போது, ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது; தாக்குதல் நடத்தக் கூடாது என, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இரு தரப்பு ஒப்பந்தங்களை முறையாக மதித்து நடப்பதே, இரு தரப்பு பிரச்னைகளில் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE