பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில், வளர்ச்சித் திட்டம் தயாரிக்க, கிராம திட்டக்குழு உறுப்பினர்களுக்கு, 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில், மக்களுக்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை, மக்கள் பங்களிப்புடன் தயாரிக்கும் வகையில், மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கீழ், கிராம வளர்ச்சித்திட்டம் தயாரிக்கபட உள்ளது.இதற்கு, ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும், ஊராட்சி தலைவர், செயலாளர், தொண்டு நிறுவன உறுப்பினர், மகளிர் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட கிராம வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, கிராம வளர்ச்சித்திட்டம் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்படுகிறது.மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடக்கும் இம்முகாமுக்கு, தெற்கு ஒன்றிய ஆணையாளர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாம் ஏற்பாடுகளை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் செய்திருந்தார்.மொத்தமுள்ள, 26 ஊராட்சிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், ஊராட்சிகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், ஊராட்சிகளின் வருவாயினங்கள், நிதி ஆதாரங்களை திரட்டுதல், நிதி இல்லா வளர்ச்சி, செலவினங்கள், செயற்கை கோள் பட உதவியுடன் திட்டம் தயாரித்தல், கொரோனா பரவல் தடுப்பில் ஊராட்சி நிர்வாகத்தின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE