உடுமலை:உடுமலையில், உயர் மின் கோபுர விளக்குகள் ஒளிராமல் உள்ளதால், இரவு நேரங்களில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.உடுமலை நகராட்சியில், பிரதான ரோடுகளான, பழைய பஸ் ஸ்டாண்ட், கொழுமம் ரோடு பிரிவு, தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெரு விளக்குகள், உயர் மின் கோபுர விளக்குகள் பராமரிப்பதில், நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், இரவு நேரங்களில் பெரும்பாலான விளக்குகள் எரிவதில்லை. அதிலும், பழநி ரோடு- கொழுமம் ரோடு சந்திப்பு, தில்லை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, உயர் மின் கோபுர விளக்குகள் பல மாதமாக எரிவதில்லை. மேலும், உடுமலை பஸ் ஸ்டாண்ட் துவங்கி பெரிய கோட்டை பிரிவு வரை, நகராட்சி எல்லை அமைந்துள்ளது. பழநி ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுகிறது. இந்த ரோட்டில், மையத்தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE