திருப்பூர்:'சமர்த்' திட்டத்தில், 16,508 பேருக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு, மத்திய ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், 'சமர்த்' என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், நிறுவனங்கள், புதிய தொழிலாளருக்கு பயிற்சி அளித்து, பணி அமர்த்திக்கொள்ளலாம்; பயிற்சிக்கான செலவினங்களை, நிறுவனத்துக்கு, அரசு, வழங்குகிறது.இந்த திட்டத்தில், 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு விவரங்கள் அனுப்பியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சகம், தற்போது, திருப்பூரில் 16,508 பேருக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:'சமர்த்' திட்டத்தில், திருப்பூரில், 16,508 பேருக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, மத்திய ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இப்பயிற்சியை, ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, செயல்படுத்த உள்ளன. இதற்காக, ஆடை உற்பத்தி நிறுவனங்களில், 75 பயிற்சி மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.செக்கிங், டெய்லர், ஓவர்லாக், பிளாட்லாக் மெஷின் ஆபரேட்டர், சூயிங் மெஷின் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. புதியவர்களுக்கு, மொத்தம் 300 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டு, பணி அமர்த்தப்படுவர்.பயிற்சிகளால், திருப்பூர் பின்னலாடை துறையில், திறன் மிக்க தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், ஆடை உற்பத்தியில் தவறுகள் களையப்படும்; வீண் செலவினங்கள் தவிர்க்கப்பட்டு, உற்பத்தி பெருகும். தொழில் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் துறை அதிகாரிகளுக்கு, ஏற்றுமதியாளர் சங்கம் நன்றி தெரிவிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE