சூலுார்:வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, ஓட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தியதை, சூலுார் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நான்கு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களை, வணிக நோக்கில் செயல்படும் பேக்கரி, ஓட்டல்களில் பயன்படுத்த தடை உள்ளது. அதையும் மீறி, புறநகரில் வீட்டு சிலிண்டர்கள் கடைகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய, உணவு பொருட்கள் வழங்கும் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.சூலுார் வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் சூலுார் பிரிவு, கணியூர், கருமத்தம்பட்டி, அன்னுார் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நான்கு இடங்களில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக நோக்கில் பயன்படுத்தியதை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நான்கு சிலிண்டர்கள், பறிமுதல் செய்யப்பட்டது.வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் கூறுகையில், ''வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது. ஆய்வு நடக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால், சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். சூலுார் வட்டாரத்தில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE