வேலுார்:வேலுார் சிறையில், 12வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும், ராஜிவ் கொலையாளி முருகன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை விடுதலை செய்யுங்கள் அல்லது ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி நேற்று, 12வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில், சிறைத்துறை சார்பில், முருகன் மீது பாகாயம் போலீசில் நேற்று புகாரளிக்கப்பட்டது.அதில் கடந்த, 19ல், முருகன் மனு கொடுத்ததற்கிணங்க, சென்னையில் உள்ள அவரது உறவினர்களுடன், வீடியோ போன் காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது, எதிர்முனையில் இருந்த அவர் உறவினர்கள், லண்டனில் உள்ள முருகனின் உறவினர்களோடு பேச இணைப்பு கொடுத்து விட்டனர். முருகனும் அவர்களோடு பேசியுள்ளார். இதை தடுத்த சிறை போலீசாரை, முருகன் பணி செய்ய விடாமல் தடுத்து அவதுாறாக பேசியுள்ளார். இது சிறைத்துறை விதிகள் மீறிய செயலாகும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து, பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குபதிவு செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE