சென்னை:போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்; தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் இருவருக்கும், சொத்துக்களை நிர்வகிக்க உரிமை உள்ளது; ஜெ., பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்துவது குறித்து தெரிவிக்கும்படி, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. இருவருக்கும், அவர்களின் செலவில், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில், சிறப்பு பிளீடர் பாப்பையா ஆஜராகி, ''இருவருக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம். ஆறு மாதங்களுக்கு முன்பணமாக, 20.83 லட்சம் ரூபாய் செலுத்தும் படி, போலீஸ் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; அதற்கு பதில் இல்லை,'' என்றார்.
தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்; தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாக தெரிவித்தார். தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் ஆணையர் கடிதத்துக்கு பதில் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE