மொடக்குறிச்சி: கொடுமுடி யூனியன், நஞ்சை கொளாநல்லியில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. பத்து மாதமாக அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். அலுவலகத்தை திறக்க, அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த மாதம், 22ல், அலுவலகத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதாக, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், 24ம் தேதி வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறந்தனர். பொறுப்பு வி.ஏ.ஓ.,வாக குட்டப்பாளையம் வி.ஏ.ஓ., பிரகாஷ் பணியை கவனித்து வந்தார். தற்போது அலுவலகம் திறக்கப்படுகிறது. ஆனால் வி.ஏ.ஓ., இருப்பதில்லை. இதனால் பழையபடி மக்கள், குட்டப்பாளையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், அலுவலக வளாகத்தின் வெளியே, நேற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர். அதில், 'கொளாநல்லிக்கு நிரந்தரமாக வி.ஏ.ஓ.,வை நியமித்திடு, போராட்டத்தை தூண்டாதே' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையறிந்த மலையம்பாளையம் போலீசார், உடனடியாக பேனரை அகற்றினர். சங்கத்தின் கொடுமுடி வட்டார செயலாளர் கனகவேல் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE