உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
நா.ராஜகோபாலன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இப்பகுதியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். நான், ஓட்டு சீட்டு மற்றும் இயந்திரம் என, இரு காலத்திலும் பணி புரிந்துள்ளேன். என் அனுபவ அடிப்படையில், 'மாபெரும் ஜனநாயக நாட்டில், ஓட்டுப்பதிவு இயந்திரம் தான், சிறந்தது' என்பேன்.
'எலக்ட்ரானிக்' இயந்திரத்தின் செயல்பாட்டை, 'ஹாக்கிங்' எனப்படும், தகவல் திருட்டு செய்ய முடியும் என, பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹாக்கிங் செய்ய, இணைய வசதி வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அந்த வசதி கிடையாது. அது ஒரு, 'கால்குலேட்டர்' போன்றது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் தேர்தல் நடத்துவது என்பது, சாதாரண விஷயம் அல்ல.
எவ்வளவோ கோடி ரூபாய் வாரி இறைக்க வேண்டும்; எண்ணிலடங்கா மனித உழைப்பு, அதில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம், ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
ஓட்டுப்பதிவு இயந்திரம் எப்படி பாதுகாக்கப்படுகிறது? ஓட்டு சாவடிக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது? தேர்தல் நேரத்தில், அது எப்படி செயல்படுத்தப்படுகிறது? ஓட்டு எப்படிகணக்கிடப்படுகிறது என்ற, பல சந்தேகங்களுக்கு, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது; ஆனால், ஓட்டு சீட்டில் செய்ய முடியும்.
ஒரு கட்சிக்கு விழுந்த ஓட்டை, வேறு கட்சியின் பெட்டியில் போட முடியும். அரசுக்கு எதிரான மனநிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர் இருந்தால், முறைகேடு அதிகளவில் நடக்கும். அரசியல் கட்சியின் முகவர்கள், முதல், ஒரு மணி நேரம் மட்டுமே, ஓட்டு சீட்டு எண்ணிக்கையை கவனிப்பர்; பின், களைத்து விடுவர்.

இயந்திரத்தில், செல்லாத ஓட்டு பிரச்னை ஏதும் இல்லை; ஓட்டுச் சீட்டில் உண்டு. வெற்றி வித்தியாசம், செல்லாத ஓட்டை விட குறைவாக இருக்கும் நேரத்தில், அரசியல்வாதிகளிடம் இருந்து அழுத்தம் அதிகமாக வரும். ஓட்டுச் சீட்டில் தேர்தல் நடத்தினால், 'பேப்பரில் மோசடி; இங்க் மோசடி' என, குற்றச்சாட்டு வரும். தோல்வியை, எந்தக் கட்சியும் ஒத்துக் கொள்ளாது. ஓட்டு சீட்டு முறை, பிரச்னையை அதிகரிக்கும். ஓட்டுப்பதிவு இயந்திரமே, எவ்வகையிலும் சிறந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE