புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு, குளிர்தாங்கும் ஆடைகள் வாங்க, பஞ்சாபி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஹரியானா எல்லையில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்தில், பஞ்சாபி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் நேற்று(டிச.,5) கலந்து கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசை வலியுறுத்திய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குளிர் தாங்கும் ஆடைகள் வாங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: புதிய வரலாற்றை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். விவசாயிகளின் பிரச்னைகளை யாரும் திசை திருப்ப கூடாது. இந்த வரலாறு வருங்கால சந்ததியினருக்கு விவரிக்கப்படும். விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்துகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அவர்களுக்கு துணையாக இருக்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE