கோவை: சூட்கேசில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து, விமான பயணியிடம் கொடுத்தவர்களை, கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர், நாகரத்தினம், 44. நேற்று முன்தினம், சார்ஜா செல்வதற்காக கோவை வந்த இவர், தன் நண்பர்கள் காலி சூட்கேஸ் கொடுத்ததாகவும், அதுகுறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சூட்கேஸில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கிலோ போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், நாகரத்தினம், சவுதி அரேபியாவில், டிரைவராக பணிபுரிந்து வருவது தெரிந்தது.விபத்தில் சிக்கிய மனைவி, குழந்தையை பார்க்க, திருச்சி வந்தவர், கொரோனாவால் சவுதி அரேபியா செல்ல முடியவில்லை.மீண்டும் சவுதி அரேபியா செல்ல பணம் இல்லாததால், பலரிடம் உதவி கேட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த அருள், அலிபாய் ஆகிய இருவரும் உதவி செய்வதாக கூறியது தெரிந்தது.
நாகரத்தினத்துடன் விமான நிலையம் வந்த இருவரும், காலி சூட்கேசை கொடுத்து, சவுதி அரேபியாவில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சந்தேகம் ஏற்பட்டதால், நாகரத்தினம் சூட்கேசை போலீசாரிடம் ஒப்படைத்தது தெரிந்தது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர், நாகரத்தினத்திடம் சூட்கேசை கொடுத்தது உறுதியானது.இதையடுத்து, அருள், அலிபாய் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE