ஆத்தூர்: பருவ மழை பெய்து வருவதால், முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆத்தூர், கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு, மலை குன்றுகளுக்கு இடையே, முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. 'சூழல் சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 'கொரோனா' பரவல் காரணமாக மூடப்பட்ட முட்டல் ஏரி படகு சவாரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, எட்டு மாதங்களுக்கு பிறகு, கடந்த, 1ல், திறக்கப்பட்டது. சில நாட்களாக, கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில், அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதுகுறித்து, ஆத்தூர் வனத்துறையினர் கூறுகையில், 'ஆணைவாரி நீர்வீழ்ச்சியில், அதிகளவில் தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகள் இன்று முதல் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீண்டும் அனுமதித்த பின், நீர்வீழ்ச்சி, படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுவர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE