அரூர்: அரூர் அருகே, மலை கிராமத்தில், தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசமானது. இதில், சிக்கிய ஆடு மற்றும் 15 கோழிகள் தீயில் எரிந்து கருகின. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்., மண்ணூரை சேர்ந்தவர் தீத்தான், 65. இவரது, மனைவி ராஜம்மாள், 60. தம்பதியர் இருவரும், குடிசை வீட்டில் வசித்து வந்தனர். ஆடு, மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, தீத்தான் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், ராஜம்மாள் விறகு அடுப்பில் சமைத்துள்ளார். பின்னர், அவர் தண்ணீர் எடுக்க வெளியே சென்று விட்டு திரும்பினார். அப்போது, வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதும், வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், உணவு தானியங்கள், ஒரு ஆடு மற்றும், 15 கோழிகள் எரிந்து கருகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE