ஓசூர்: ''ரஜினியின் தேர்தல் நேர அரசியல், மத சார்பற்ற அரசியலுக்கு பயன்படுமா என்பது சந்தேகம்,'' என, இ.கம்யூ., தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அவர் நேற்று கூறியதாவது: டில்லியில் நடக்கும் போராட்டம், இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது. தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி, மூன்று வேளாண் சட்டங்களை நிராகரிப்பதாக தீர்மானம் போட்டு, முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். வரும், 8ல், நாடு தழுவிய அளவில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, 50 விவசாய சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதற்கு, இ.கம்யூ., ஆதரவு தெரிவிப்பதோடு, அவர்களோடு களத்தில் இறங்க போகிறோம். ரஜினி கட்சியின் கொள்கை, லட்சியம், எண்ணங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தல் நேரத்தில் அவருடைய அரசியல் என்பது, மத சார்பற்ற அரசியலுக்கு பயன்படுமா, என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE