ராணிப்பேட்டை: 'நிவர்' புயல் வெள்ளத்தால், பாலாற்றில் பைப் லைன் உடைந்து, 120 கிராமங்கள், ஐந்து நகராட்சிகளில், 10 நாட்களாக குடிநீர் வினியோகமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், பாலாற்றில் அமைத்துள்ள பைப் மூலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு, குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த, 26ல், 'நிவர்' புயல் மழையால், பொன்னையாறு, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ராணிப்பேட்டை அருகே, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில், பாலாற்றின் வழியாக அமைத்திருந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள், பல இடங்களில் உடைந்ததோடு, சில இடங்களில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம், சோளிங்கர் நகராட்சிகள் மற்றும், 120 கிராமங்களில் கடந்த, 10 நாட்களாக குடிநீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், பைப் லைன்கள் சரி செய்யப்படும். முழு அளவில் குடிநீர் வினியோகம் செய்ய மேலும், 10 நாட்களாகும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE