சேலம்: ''தொழிலாளர் விரோத நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபடாது,'' என, சேலத்தில் மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் பக்கன்சிங் குலாதஸ்தே கூறினார்.
அம்பேத்கரின், 64வது நினைவு தினமான நேற்று, சேலம் மரவனேரியில் உள்ள, அவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த பின், மத்திய இணை அமைச்சர் பக்கன்சிங் குலாதஸ்தே நிருபர்களிடம் கூறியதாவது: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அம்பேத்கர் புரிந்த சேவையை நினைவு கூற வேண்டும். அவர் தொடர்புடைய அனைத்து இடங்களையும், பா.ஜ., அரசு நல்ல முறையில் பராமரித்து வருகிறது. அவர் பிறந்த, வாழ்ந்த, உயிர்நீத்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு, அனைவரும் காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை, தனியார் மயமாக்குவது தொடர்பாக, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அங்கு பணியாற்றக்கூடிய, ஒவ்வொரு தொழிலாளியின் வாழ்வாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதை நான் உறுதியாக சொல்கிறேன். தொழிலாளர் விரோத நடவடிக்கையில், நாங்கள் ஈடுபட மாட்டோம். சேலம் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனையும் பாதுகாப்பதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE