சென்னிமலை : பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், கல்லுாரிக்கு வந்த முதல் நாளே, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், அரசு மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது. சாலை போக்குவரத்து மருத்துவக் கல்லுாரியாக செயல்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு மருத்துவக் கல்லுாரியாக மாற்றப்பட்டது. இங்கு தனியாரைப் போல், ஆண்டு கல்வி கட்டணம், 3 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.அதே நேரம், மற்ற அரசு மருத்துவக் கல்லுாரியில், 13 ஆயிரத்து, 610 ரூபாய்தான் கட்டணம். அரசு மருத்துவக் கல்லுாரியாக மாற்றி, இரண்டு ஆண்டுகளாகியும், கட்டணத்தை குறைக்கவில்லை.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நிலையில், ஏழு மாதங்களுக்கு பின், நேற்று கல்லுாரி திறக்கப்பட்டது. பெற்றோருடன் வந்த மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை டி.எஸ்.பி., செல்வராஜ் பேச்சு நடத்தினார். உடன்பாடு ஏற்படாத நிலையில், தாசில்தார் முத்துகிருஷ்ணன், கல்லுாரி டீன் மணி பேசினர். ஜன., 15 வரை கல்வி கட்டணத்தை கட்ட நிர்ப்பந்தமில்லை.அதன்பின் கட்டணத்தை குறைக்க, அரசுக்கு கோரிக்கை வைப்பது என, உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவ - மாணவியர் கல்லுாரிக்கு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE