புதுடில்லி : கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 96.77 லட்சம் பேரில், 94.45 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று, 3.97 லட்சமாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை : கொரோனா கண்டறிய, நாடு முழுதும் இதுவரை, 14.77 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில், எட்டு லட்சம் பேரிடம் நடந்த பரிசோதனைகள் வாயிலாக, 32 ஆயிரத்து, 981 பேரிடம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், 96 லட்சத்து, 77 ஆயிரத்து, 203 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில், 3.97 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 4.10 சதவீதம்.வைரஸ் பாதிப்பில் இருந்து, 91 லட்சத்து, 39 ஆயிரத்து, 901 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 94.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் கடந்த, 24 மணி நேரத்தில், 391 பேர் உயிரிழந்துள்ளனர். டில்லியில் அதிகபட்சமாக, 69 பேர் பலியாயினர். இதனால், ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 573 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.பலி எண்ணிக்கையில், 47 ஆயிரத்து, 734 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இரண்டாம் இடத்தில் தமிழகம் நாட்டில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில், ஐந்து லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில், ஆந்திராவில் தொற்றுக்குள்ளான, 8.72 லட்சம் பேரில், 8.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மீட்பு விகிதம், 98.51 சதவீதமாக உள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில் மீட்பு விகிதம், 97.14 சதவீதமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE