சென்னை : ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தை புரட்டி எடுத்த, 'புரெவி' புயல், வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து, முடிவுக்கு வந்துள்ளது. இதனால், கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பர் வரை பெய்ய வேண்டிய, இயல்பான அளவுக்கு பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில், டிச., 1ல் உருவான புரெவி புயல், டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வடக்கு, வடகிழக்கு மாவட்டங்களிலும், அதீத கனமழையை கொட்டியது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல், ஒரு வாரமாக மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து நகர முடியாமல், சுற்றுப்புற மாவட்டங்களில் மழையாக பொழிந்தது.இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த புயல், நேற்று வளிமண்டல சுழற்சியாக மேலும் வலு குறைந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனால், தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு, ஒரு வாரமாக விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை, நேற்று வாபஸ் பெறப்பட்டது. இன்று ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டமாக காணப்படும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE