திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தி.மு.க., பிரமுகர் கொலையில், இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை, அ.தி.மு.க., நகர செயலாளராக இருந்தவர், கனகராஜ், 52; இவருடன், திருவண்ணாமலையை சேர்ந்த, தி.மு.க., பிரமுகரான பங்க் பாபு, 53, என்பவர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களிடையே ஏற்பட்ட தொழில் தகராறில், பங்க் பாபு பிரிந்து, தனியாக தொழில் செய்து வந்தார். கடந்த, 2017ல், நண்பருடன் பைக்கில் சென்ற கனகராஜை, பங்க் பாபு மற்றும் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டிக் கொன்றது. இதில் கைதான பங்க் பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்து, மீண்டும் பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த, 3ல், பழைய பைபாஸ் சாலையில், அவரது வீட்டின் அருகே உள்ள, ஒரு கடையில் டீ குடிக்க சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு, கொலையில் தொடர்புடைய, கனகராஜின் மனைவி ஞானசவுந்தரி, 32, இவரது தாய், ராணி, 58, மற்றும் அவரது உறவினரான சுரேஷ், 32, ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE