புதுடில்லி : 'சிறையில் உள்ள திருநங்கையர் குறித்த விபரங்கள் சிறைத்துறை தகவல் அறிக்கையில் சேர்க்கப்படும்' என டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் கரண் திரிபாதி பொதுநல மனு தாக்கல் செய்தார்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
நாட்டில் சிறைகளில் உள்ள திருநங்கையர் கைதிகள் குறித்த தகவல்களை சிறைச்சாலை புள்ளிவிபர அறிக்கைகளில் சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தேசிய குற்றவியல் பதிவுகள் பணியகத்திற்கு உ த்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா ஆஜரானார்.அவர் கூறும்போது ''நடப்பாண்டு முதல் சிறைகள் தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கைகளில் திருநங்கையர் கைதிகளின் தகவல்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE