நாகர்கோவில் : ''ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சைஅனுமதிக்கப்படுவது என்பது இந்தியாவை கற்காலத்துக்கு அழைத்து செல்வதாகும்'' என அகில இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ஜெயலால் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
ஆயுஷ் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வழிவகை செய்யும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது மருத்துவத்துறையில் கலப்படத்தை உருவாக்கும். ஆயுர்வேதம், சித்தா மருத்துவம், யுனானி, ஹோமியோபதி டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பை அறிவித்தது தவறான அணுகுமுறை. மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சட்டம் போன்று ஒரே மருத்துவம் என்பது ஆபத்தை ஏற்படுத்தும். நவீன மருத்துவத்தின் வளர்ச்சி அதள பாதாளத்துக்கு செல்லும். மயக்க மருந்து இல்லாத ஆயுஷ் துறையில் எப்படி அறுவை சிகிச்சை நடத்த முடியும். வளர்ந்து வரும் மருத்துவத்துறையை அழிவு பாதைக்கு கொண்டு சென்று மக்கள் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது. எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை கலைக்க வேண்டும்.
வேலைநிறுத்தம்: இதை வலியுறுத்தி இன்று மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை நான்கரை லட்சம் டாக்டர்கள் தர்ணாவில் ஈடுபடுவார்கள். மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் டிச.,11- காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை பொது வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள் ஈடுபடுவார்கள். எனினும் உயிர்காப்பு அவசர சிகிச்சை மட்டும் செய்யப்படும்.
வளர்ந்து வரும் விஞ்ஞானத்தை பாரம்பரியம் என்ற பெயரில் புறந்தள்ளுவது இந்தியாவை கற்காலத்துக்கு அழைத்து செல்வதாகும். இது எப்படி என்றால் நீதிமன்றங்களை ஒழித்து விட்டு பாரம்பரியமாக இருந்து வந்த கட்ட பஞ்சாயத்தை அமல்படுத்துவது போன்றதாகும். ஆயுஷை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்று அந்த துறையின் அமைச்சர் சொல்கிறார். நாட்டு மக்களின் சுகாதார நலனை காக்க அதையும் ஏற்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE