திருப்பூர்:'ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும், அரசு வழங்கும் நல உதவியை பெற்று, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்,' என, கலெக்டர் பேசினார்.மாற்றுத்திறனாளிகளும், தன்னம்பிக்கையுடன், மற்றவர்களுக்கு சரிநிகராக வாழ வேண்டும் என்ற நோக்கில், நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு உதவி வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சக் ஷம் அமைப்பு சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'பேட்டரி'யில் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.முதுகுத்தண்டு மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, 94 மாற்றுத்திறனாளிகளுக்கு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'பேட்டரி' சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.சக் ஷம் அமைப்பு சார்பில், மூன்று பயனாளிகளுக்கு, 10 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால், 18 பேருக்கு, 'பேசும்' மொபைல் போன் ஆகியவற்றை, கலெக்டர் விஜய கார்த்திகேயன் வழங்கினார்.கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 183 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5,064 பேர், மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அரசு வழங்கும் உதவிபெற்று, மாற்றுத்திறனாளிகள் ஊக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து, சாதனை படைக்க வேண்டும்,' என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE