அன்னுார்:குக்கிராமம் வாரியாக தேவைகளை கணக்கெடுக்க வேண்டும் என பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.ஊரக வளர்ச்சி துறை சார்பில், அடுத்த நிதியாண்டில், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேவைகள் அடங்கிய வளர்ச்சி திட்டம் தயாரிக்க, அனைத்து ஊராட்சிகளிலும், தலா ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், ஆதிதிராவிடர் வார்டு உறுப்பினர், இளைய வயது வார்டு உறுப்பினர், சுய உதவி குழு உறுப்பினர், சமூக ஆர்வலர் என ஒன்பது பேர் உள்ளனர்.காரேகவுண்டன்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் உட்பட, 15 ஊராட்சிகளை சேர்ந்த குழு உறுப்பினர்கள், 135 பேருக்கு, நேற்றுமுன் தினம் இரண்டு நாள் பயிற்சி துவங்கி, நேற்று முடிந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.முதன்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சூர்யபிரபா பேசியதாவது:குழு உறுப்பினர்கள், தங்கள் ஊராட்சியில் அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரடியாக சென்று, மக்களை சந்தித்து, அந்த கிராமங்களின் தேவைகளை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். ஊராட்சியில் என்னென்ன வளங்கள் உள்ளன என அனைத்தையும் கணக்கெடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, வேளாண், தோட்டக்கலை என அனைத்து துறைகளிலிருந்தும், ஊராட்சிக்கு பெற வேண்டியவை குறித்து பட்டியலிட வேண்டும். ஊராட்சியின் தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டால் தான், வரும் 2021-22ம் நிதியாண்டில், அதற்கான நிதி ஆதாரம் திரட்டி பணிகள் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வளர்ச்சி திட்டம் தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்தனர். ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பயிற்றுனர்கள் பதில் அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE