உடுமலை:மக்காச்சோளம் சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்ய, இம்மாதம், 21ம் தேதி கடைசி நாளாகும்; இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளுக்காக, பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அறிக்கை: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், தற்போது, ராபி பருவத்தில், மக்காச்சோளம், சோளம் பயிர்களுக்கு, சாகுபடி செய்துள்ளவர்கள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீடு செய்ய, டிச., 21ம் தேதி கடைசிநாளாகும். இத்திட்டத்தில், மக்காச்சோளம் மற்றும் சோளப்பயிர்களை காப்பீடு செய்து கொண்டால், இயற்கை சீற்றத்தால், பயிர் மகசூல் ஏற்படும் பாதிப்புக்கு, இழப்பீடு வழங்கப்படும்.ஒரு ஏக்கருக்கு, பயிர் காப்பீடு செய்ய, 441 ரூபாய், மற்றும் சோளம் பயிருக்கு, ஏக்கருக்கு, 34 ரூபாய், வி.ஏ.ஓ., சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு புத்தக நகல், போட்டோ - 2, ஆகிய ஆவணங்கள் தேவையாகும்.இந்த ஆவணங்களை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை அணுகி, பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE