மேட்டூர்: நிர்வாகம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், ஷீரடி சாய்பாபா கோவில் பூட்டப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர், தூக்கனாம்பட்டி காவிரி கரையோரம், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், நகராட்சி முக்கிய பிரமுகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பணம் வசூல் செய்து, அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டினர். கோவில் உட்பகுதியில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஷீரடி சாய்பாபா சிலை அமைத்தனர். சில மாதங்களாக, வாரம்தோறும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்ததால், பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமின்றி, காணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில், கோவிலை நிர்வாகம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும், உடன்பாடு ஏற்படவில்லை. இரு நாட்களுக்கு முன், கோவிலுக்குள் யாரும் நுழையக்கூடாது என, இரு தரப்பினரும் தனித்தனியாக பூட்டுகளை போட்டு பூட்டி விட்டனர். இதனால், வழிபாடு செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE