வாஷிங்டன்: பங்குச் சந்தையை உச்சத்துக்குக் கொண்டுவந்ததாலும், சிறந்த வேலைவாய்ப்பை அளித்ததாலும் அமெரிக்க அதிபராகத் தொடர உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். தேர்தல் மோசடி செய்து பைடன் வெற்றி பெற்றதாக கூறி பைடனின் வெற்றியை எதிர்த்து வழக்கும் தொடர்ந்த டிரம்ப், சில வழக்குகளில் தோல்வி அடைந்த போதிலும் தேர்தல் மோசடி என்னும் தனது கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தின்போது டிரம்ப் கூறியதாவது: அடுத்த நிர்வாகம் நிச்சயமாக டிரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என நம்புகிறோம். ஏற்கனவே நான் பங்குச்சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். சிறந்த வேலைவாய்ப்பு அளித்துள்ளேன். ராணுவத்தை சீரமைத்துள்ளேன். எனவே நானே அதிபராக தொடர்வேன். நாம் அடுத்த நிர்வாகம் குறித்து சிந்திக்க வேண்டும். நாம் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

நமக்குப் பல கடமைகள் உள்ளதால் அடுத்த நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் எனக் கவனிக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் அளிக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆயிரக்கணக்கில் வாக்களித்த டிரம்ப்பின் ஆட்சி நிச்சயம் மேலும் தொடரும். பல்லாயிரக்கணக்கான வாக்குகளை யாராலும் திருட முடியாது. எனவே தேர்தல் மோசடி மற்றும் ஒரு சில மாகாண வெற்றிகளுடன் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது.

நீங்கள் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் நிஜத்தையும் நடந்துள்ள மோசடியையும் பார்க்க வேண்டும். பாரக் ஒபாமா தனது 2வது தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றும் வெற்றி பெற்றார். ஆனால் நான் 1.2 கோடி வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளேன். எனவே அடுத்த நிர்வாகம் யாருடையது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தற்போது எனக்கு அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டிய பணி உள்ளது. அதை அளிப்பதே எனது முதல் பணியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE