புதுடில்லி:நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில், 'கொரோனா' பாதுகாப்பு முதல், தீ தடுப்பு பாதுகாப்பு வரையிலான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதில், பல நோயாளிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரிக்கின்றது. விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் பாதுகாப்பு வசதிகள்பின்பற்றப்படுவதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது முதல், தீ தடுப்பு பாதுகாப்பு வரை என்னென்ன வசதிகள் உள்ளன.
இவற்றை உறுதி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து, அந்த மாநில அரசு தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.அதையடுத்து, வழக்கு, 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE