கோவை : குனியமுத்துார் பகுதியில், 'வெட் மிக்ஸ்' சாலை போடும் பணியை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
குனியமுத்துார் செங்குளம் நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டத்து கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்து, நீரூற்று ஏற்படுகிறது.இதன் காரணமாக, குளத்தை சுற்றியுள்ள வசந்தம் கார்டன், கிளாசிக் கார்டன், கங்கா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை, தண்ணீர் சூழ்ந்து வருகிறது.மோட்டார் வைத்து உறிஞ்சி அகற்றினாலும், குளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கியிருப்பதால், ஊற்று வந்த வணணம் இருக்கிறது.
இதன் காரணமாக சாலைகள் பெயர்ந்திருக்கின்றன. அவ்விடங்களில், 'வெட் மிக்ஸ்' பயன்படுத்தி, சாலை போடப்படுகிறது.இப்பணிகளை, கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். குறிஞ்சி நகரில், கழிவு நீர் 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டும் பணி துவங்கியிருப்பதை பார்வையிட்ட கமிஷனர், ஆசிரியர் குடியிருப்பு காலனி, குறிச்சி பிரிவு இட்டேரி, நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதிகளில் சாலை போடும் பணியை ஆய்வு செய்தார். குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE