பூந்தமல்லி - பூந்தமல்லியில், தனியார் வங்கி, ஏ.டி.எம்., மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முழுதும் எரிந்து நாசமானது.பூந்தமல்லி, டிரங்க் சாலையில், ருக்மணி நகர் செல்லும் வழியில், எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை, ஏ.டி.எம்., மையத்தில் இருந்து, திடீரென புகை வெளியேறியது.பணம் எடுக்க வந்தவர்கள், இதை கண்டு அலறியடித்து ஓடினர். சிறிது நேரத்தில், மையம் முழுதும் பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். விபத்தில், ஏ.டி.எம்., மிஷின் உட்பட, மையம் முழுதும் தீக்கிரையானது. ஏ.டி.எம்., மிஷினில், பல லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்துக்கான காரணம், மின் கசிவா அல்லது மர்ம நபர்களின் நாசவேலையா என்பது குறித்து, விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.மேலும், இந்த ஏ.டி.எம்., மையத்திற்கு, காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE