சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை, நினைவு இல்ல மாக்கும் பணி தொடர்பாக, அவரது இல்லத்தில், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், திடீர் ஆய்வு நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகையை, சென்னை சிவில் நீதிமன்றத்தில், தமிழக அரசு செலுத்தியது. ஜெ., வீட்டில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் விபரத்தை அரசு வெளியிட்டது.கொரோனா காரணமாக, அடுத்த கட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டது.
தற்போது, கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், ஜெ., வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தலைமையில், ஆறு அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை, திடீரென ஜெ., வசித்த வேதா இல்லத்திற்கு, நேரில் சென்று ஆய்வு செய்தனர். நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பின், அதை பார்வையிட, பொதுமக்களை அனுமதிக்கும் போது, எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது என்பது குறித்தும் ஆலோசித்தனர்.
ஜெ., பயன்படுத்திய பொருட்கள், அவரது வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தொடர்பான புகைப்படங்களை, பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE