திருப்பூர்:நெரிப்பெரிச்சல் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகங்களில், மண்டல பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் நகரில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகளும், திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.அவ்வகையில், நெருப்பெரிச்சல் பகுதியில், ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் அமைக்கப்பட்டது.அங்கு, மாவட்ட பதிவாளர் அலுவலகம், எண்1 மற்றும் 2 சார்பதிவாளர் அலுவலகங்கள், தொட்டிபாளையம் சார் பதிவாளர் அலுவலகங்கள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.இந்த அலுவலகம் நகரில் இருந்து, தொலை துாரத்தில் அமைந்துள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், பத்திர பதிவுக்கு செல்லும் மக்கள், பாதிப்படைகின்றனர். அதேநேரம், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், உரிய நேரத்தில் சரிவர பணிக்கு வராத காரணத்தால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.தவிர, பத்திர பதிவுகள், உரிய காலத்திற்குள் முடிக்கப்படாமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக, மண்டல பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன், இந்த அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உரிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும்; பத்திர பதிவுகளை, மூன்று தினங்களுக்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE