வேலுார்"சிறையில், 21வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன், ஆபத்தான நிலையில் இருப்பதாக, வக்கீல் புகழேந்தி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை விடுதலை செய்யுங்கள் அல்லது ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வக்கீல் புகழேந்தி, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நேற்று அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்த கோப்பு, கவர்னரின் கையெழுத்துக்காக உள்ளது. தற்போது வேலுார் சிறையில், 21வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறை அதிகாரிகள், அவரை கொடுமைப்படுத்தி மன நோயாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர். சக கைதி ஒருவர், சிறையில் உள்ள முருகனுக்கு துளசி இலை கொடுத்துள்ளார்.இதை காரணமாக வைத்து, சிறை காவலர்கள் முருகன் அறையில் சோதனை செய்து, பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது, பணி செய்ய விடாமல் முருகன் தடுத்ததாக, சிறை காவலர்கள் புகார் செய்ததால், பாகாயம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவரை விடுதலை செய்யக்கூடாது என்பதால், இது போன்ற பொய் வழக்குகள் போட்டு தனிமை சிறையில் அடைத்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். முருகனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE