நாமக்கல்: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கும், மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மொத்தம், 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை, சால்ய தந்திரம்' என, பட்டியலிட்டு, இந்த சிகிச்சைகளை, ஆயுர்வேத மருத்துவர்களும் மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மருத்துவர் சங்கத்தினருக்கு ஆதரவாகவும், அரசு மருத்துவர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து, அரசு மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: ஆயுஷ் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யும்போது, பயன்படுத்தப்படும் மயக்க மருந்து, அலோபதி மருந்துகள். அதற்கு, அலோபதி நிபுணர்கள் தேவைப்படுவர். அறுவை சிகிச்சைக்கு பின், கொடுக்கும் மருந்து, ஆயுஷ் மருத்துவத்தில் இல்லை. கலப்பட முறை மருத்துவ முறைகளை உருவாக்குவது, மக்களுக்கு பேராபத்தை கொடுக்கும். மத்திய அரசின் இந்த முடிவை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும், 400க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினார். அதேபோல், இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் கிளை சார்பில், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, மாவட்டத்தில் உள்ள, 280 தனியார் மருத்துவமனைகளில், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து, காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE