சென்னை: பிறந்த நாளன்று, ரஜினியை பார்க்க வேண்டுமென்று, அவரது ரசிகர்கள் பலர் போயஸ் கார்டன் வீட்டின் முன்பு குவிந்தனர். ஆனால், அவர் வீட்டில் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நடிகர் ரஜினிக்கு இன்று 70வது பிறந்தநாள். அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்திருந்தனர். சிலர், ரஜினி வேடமிட்டும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், ரஜினியை வெளியே வர வலியுறுத்தி, கோஷங்களும் எழுப்பினர். கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ரஜினி நேற்று இரவே, வீட்டில் இருந்து கிளம்பி சென்றுவிட்டதாக, அவரது செய்தி தொடர்பாளர் கூறினார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். ரஜினி ரசிகர்கள் குவிந்ததால் வீட்டின் முன்பு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டால் நினைத்து நடக்கும் என்று ஐதீகம். ஆண்டுதோறும், ரஜினி பிறந்த நாள் அன்று , அவர் அரசியலுக்கு வர வேண்டி ரசிகர்கள் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு, ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்ததால், யாகம் நடத்தி கடைசியாக மண் சோறு சாப்பிட்டு நிவர்த்தி செய்தனார். மேலும் முதல்வர் ஆவதற்கும் தமிழகத்தை ரஜினி ஆள வேண்டும் என்றும் சிறப்பு யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டனர். பின்னர் பொது மக்கள் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE