கோல்கட்டா:''மேற்கு வங்கத்தில், பெண்கள் மீதான குற்ற வழக்குகளில் எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்காவிடில், இந்த பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்,'' என, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கூறினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.
நடவடிக்கை
இங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா மற்றும் நிர்வாகிகள் கோல்கட்டா வந்துஉள்ளனர்.
இதுகுறித்து, ரேகா ஷர்மா கூறியதாவது:மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, கடந்த எட்டு மாதங்களில், 267 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து, போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.அதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பியும், அவர்கள் பதில் அளிக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்ற புகார்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., பங்கேற்கவில்லை. முழுமையான தகவல்களை தர இயலாத, கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பினர். பெண்கள் மீதான குற்ற வழக்குகளின் நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதப்படும். அதிகாரிகள், 15 நாட்களில் அறிக்கை அளிக்காவிடில், இப்பிரச்னை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
இதுகுறித்து, மேற்கு வங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சஷி பாஞ்சா கூறும்போது, ''இங்கு பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ''அரசியல் காரணங்களால், மாநில நிர்வாகம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE