சென்னை:மறைந்த ஜெயலலிதா மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆதாயம் தேட முயற்சி செய்ததாக, தி.மு.க., --- எம்.பி., - ஆ.ராஜா மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் வசிப்பவர் திருமாறன். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலரான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்தித்து வரும், தி.மு.க., - - எம்.பி. - ஆ.ராஜா சென்னையில், டிச., 5ல், பேட்டி அளித்தார். அப்போது, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, மறைந்த ஜெ., - தற்போதைய முதல்வர் இ.பி.எஸ்., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.பேட்டி என்ற போர்வையில், தரம் தாழ்ந்து தனி நபர் ஒழுக்கமின்றி, பெண்மையை இழிவுபடுத்தி பேசியுள்ளார். ஜெ., - இ.பி.எஸ்., ஆகியோரை ஒருமையில் பேசியுள்ளார்.
மேலும், இவர்கள் குறித்து உண்மைக்கு மாறாக, பொதுமக்களிடம் அவதுாறு பரப்பும் வகையில், ராஜா பேசியிருப்பது வெறுக்கத்தக்க பேச்சு என்ற அடிப்படையில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உகந்ததாகும். அத்துடன், டிச., 6ல், முதல்வர் குறித்து ஒருமையில் பேசியதுடன், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது. இப்புகார் விசாரணைக்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, பரிந்துரை செய்யப்பட்டது.
புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஆ.ராஜா மீது, வேண்டுமென்றே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி, ஆதாயம் தேடுதல்; குறிப்பிட்ட அமைப்பையோ அல்லது மக்களையோ குற்றச்செயலில் ஈடுபட துாண்டுதல் என, இரண்டு பிரிவுகளில், நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE