சென்னை:'டிவி' சீரியல் நடிகை, சித்ரா தற்கொலை தொடர்பாக, பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29; கடந்த, 9ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அவரது கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம், மூன்று நாட்களாக விசாரித்தனர். இவரது தற்கொலை குறித்து, திருவள்ளூர் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது.
சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, சித்ராவின் நட்பு வட்டத்தில், பெரம்பலுார், புதுக்கோட்டையைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, நடிகை சித்ரா, பெரம்பலுாருக்கு எந்த தேதியில் வந்தார், அங்கு பங்கேற்ற விழா, திரும்ப எப்போது சென்னை புறப்பட்டு சென்றார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்று விசாரித்தனர்.
பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்தனரா என்பது குறித்தும், பெரம்பலுார் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் உளவுத்துறை போலீசார் விசாரித்து சென்றுள்ளனர். இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE