பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், சின்னதடாகம் வட்டாரத்தில் உள்ள நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பூச்சியூர், தெக்குப்பாளையம், கோவனுார் உட்பட கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம், நஞ்சுண்டாபுரத்தில் நுழைந்த யானை, வாழைகளை சேதப்படுத்தின. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்து கம்பிவேலிகளை சேதப்படுத்தின.கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் தெக்குப்பாளையம், புதுப்பாளையத்தில் உள்ள கரும்பு தோட்டங்களில் நுழைந்து கரும்புகளை ருசித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர்
பட்டாசு வெடித்து, அவற்றை மீண்டும் வனத்துக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அவை கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை தாண்டி, இடிகரை கிராமத்துக்குள் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை சேதப்படுத்தி, அதிகாலை மீண்டும் மலையடிவாரம் திரும்பின. 'காட்டு யானைகளின் நடமாட்டம் மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்' என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE